Periyandavar

திருநிலை கிராமம் காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலமான திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்து சுமார் 8 கிமி தொலைவிலும், செங்கல்பட்டிலிருந்து கிழக்கே 14 கிமி தொலைவிலும், திருப்போரூரிலிருந்து மேற்கே 12 கிமி தொலைவிலும் உள்ளது.திருநிலை ஆலயம் குழந்தைப் பேறு அருளும் ஒரு பரிகாரத் தலம்.

ஆலயம் திறக்கும் நேரம் - ஒவ்வொரு நாளும் காலை 6.00 மணிக்கு திறந்து மாலை இரவு 8.00 மணி அளவில் நடை சாத்தப்படும். இடையில் நடை சாத்தபடுவதில்லை.

அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழாக்கள் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

தொடர்புக்கு - G.ஏகசீலன் - 9842740957.


ஸ்ரீ பெரியாண்டவர் ஆலயம்

திருநிலை

திருக்கழுக்குன்றத்தில் இருந்து திருநிலைக்கு பேருந்து தடம் எண் T11, T75 மற்றும் சரஸ்வதி மினி பஸ் வசதி உள்ளது.


  • சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம்.
  • பெரியாண்டவர் ஆலய புராண வரலாற்றின்படி சக்தியின் சாபத்தால் சித்தம் கலங்கி பித்தம் பிடித்த நிலையில் ஈசன் உலகை வலம் வந்து திருநிலையில் ஓருநிலையாய் நின்ற இடம்.
  • தாயின் கருவின்றி பெரிய மனிதராக பிறவியெடுத்து ஈசனே உலகை வலம் வந்தபோது பார்வதியால் பெரியாண்டவர் என்று வணங்கப்பட்ட திருத்தலம்.
  • சிவபெருமானின் பாதம் பட்ட தலம்.
  • குழந்தைப் பேறு அருளும் பரிகாரத் தலம்.
  • கலியுகத்தில் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஈசன் ஜோதி ரூபமாக காட்சி அளித்து நின்ற தலம்.
  • ஜோதியாக காட்சி தந்த வெட்ட வெளி இடத்தில் சுயம்புலிங்கம் பிரதிஷ்டை செய்து வணங்கி வழிபடும் தலம்.
  • லிங்கத்தின் வலதுபுறம் சிவசக்தி இருவரும் ஒருங்கே அமர்ந்து தெய்வீகக் காட்சி தருகின்ற தலம்.
  • பார்வதி தேவி திருநிலைநாயகி என அழைக்கப்படும் தலம்.
  • சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.
  • சுயம்பு லிங்கத்தைச் சுற்றி சிவகணங்கள் மண் உருக்கொண்டு இறைவனை பூஜிக்கும் தலம்.
  • குளம் மற்றும் ஏரி ஆகிய இரு கரைகளுக்கு மத்தியில் இயற்கை சூழலில் அமைந்துள்ள ஆலயம்.

பல்லவர்களால் புகழ்பெற்ற பல ஆலயங்கள் கொண்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் சைவகுரவர்களால் பாடல் பெற்ற புகழ்மிக்க சிவதலமான திருக்கழுக்குன்றம். இதன் வடகிழக்கே 8 கிமீ தூரத்திலும், முருகன் அசுரர்களை எதிர்த்துப் போர் புரிந்த தலமான திருபோருரில் இருந்து மேற்கு திசையில் 12 கிமீ தூரத்திலும், செங்கல்பட்டில் இருந்து கிழக்கே 14 கிமீ தூரத்திலும், இயற்கை எழில் நிறைந்த, பசும்சோலைகள் சூழ்ந்த, வானாந்திர மரங்களாலும், மலைகலாலும் சூழப்பட்ட, திருநிலை கிராமத்தில் புள்ளினங்கள் இசைபாடும் குளம் மற்றும் ஏரி இருக்கரையின் மத்தியில் சுயம்பு லிங்கமாக தோன்றி சிவபெருமான் பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்பாளிக்கின்றார்.

மனிதனாக வந்து மக்களை காக்கும் மகேசன் - சிவபெருமானே மனிதவடிவம் தாங்கி உலகலாம் வலம் வந்து திருநிலையில் ஒருநிலையாய் தன்பாதத்தை பதித்து நின்று பெரியாண்டவர் என்ற நாமத்துடன் வீற்றிருந்து அருள்புரிகின்றார். இவ்வாலயத்தில் எம்பெருமானை சுற்றி 21 சிவகணங்கள் கைகூப்பி வணங்கி நிற்கும் காட்சி இவ்வாலயத்தை தவிர வேறு எங்கும் காணமுடியாத அரிய காட்சியாகும்.

முன் ஒரு காலத்தில் சுந்திரபத்திரன் என்ற அசுரன் சிவபெருமானை வணங்கி பல அரிய வரங்கள் பெற்றான் அவற்றுள் முக்கியமானது அவனது மரணம் சிவசக்தி சொரூபமானவரால் மட்டுமே நிகழ வேண்டும். மேலும் அதற்கு முன்னால் எம்பெருமான் மனித அவதாரம் எடுத்து முடித்திருந்தால் மட்டுமே அவனை கொல்ல முடியும் என்ற சிக்கலான வரம் பெற்று இருந்தான். இதனால் இந்திரன் முதலான தேவர்களை விரட்டியடித்து அவர்களின் ஆட்சியை கைப்பற்றி பலவகையில் தொல்லை கொடுத்து வந்தான். அசுரனின் தொல்லை பொருக்க முடியாமல் சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட்டு காக்குமாறு வேண்டினர். தேவர்களை காக்கும் பொருட்டும் அசுரர்களை அழிக்கும் எண்னத்துடன் சக்தியைக் காண எம்பெருமான் சென்றார்.

அசுரர்களின் அராஜகம் அதிகமாகி விட்டதால் அவர்களை உடனே அழித்து தேவர்களை காக்க வேண்டும், உடனே புறப்படு என்று கூறி நின்றார். ஜயன் கூறியதைக் கேளாமல் உமையவள் கண்மூடி தியானத்தில் ஆழ்ந்து அமைதி பூண்டு இருந்தார். தாயிடம் இருந்து பதில் வரததால் கோபம் கொண்ட எம்பெருமான் என்னுடைய சொல் கேட்டு பதில் கூறாமல் இருக்கும் நீ மீண்டும் மானிட பெண்ணாக பிறப்பாய் என கண்கள் கனல் கக்க எச்சரித்தார். இவ்வார்த்தை கேட்டு தியாணத்தில் இருந்து விழித்தெழுந்த பார்வதிதேவி ஜயனை நோக்கி எம்மை மானிடராக பிறக்க சொல்லும் நீவிர், எம்மில் பாதியாக விளங்குபவர் தானே ஆகவே நீரும் ஓரு நாழிகை மனிதனாக பிறக்க வேண்டும் என சாபமிட்டார். உமை அவதாரத்தின் ஆழமும், அர்த்தமும் புரிந்து பேசினாள். இவ்வார்த்தையைக் கேட்ட ஜயனின் சித்தம் மெல்ல கலங்கியது. ஈசன் தன்நிலை மறந்து மனித அவதாரம் கொண்டார். உலகமெல்லாம் திக்கு திசையின்றி அலைந்து திரிந்து வந்தார். பரமனின் இந்நிலை கண்டு உமையவள் அச்சமுற்றாள். உலக ஜீவராசிகள் பயத்தில் நடுங்கின. தேவர்கள் முதலனோர் தாயிடம் வணங்கி பரமனை காத்து அருளுமாறு வேண்டினர்.

உடனே தாய் தன் சூலாயுதத்தை வீசி எறிந்தாள் அது பிரகாசமாய் பூமியில் ஓர் இடத்தில் நிலையாய் நின்றது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து இருபத்தி ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்தன. பின் அவை ஒவ்வொன்றும் சிவகணங்களாக மாறி சுற்றி ஜயனின் வருகைக்காக காத்து நின்றன. சூலாயுத ஒளியைக் கண்டு எம்பெருமான் திருநிலையாய் ஓர் இடத்தில் பாதம் பதித்து ஒருநிலையாய் நின்றார். பார்வதிதேவி அவ்விடத்திலேயே வணங்கி நின்றாள். ஒரு நாழிகை நேரமும் முடிய மனிதனாய் வந்தவர் சிவமாய் உறுமாறி தோன்றினார். மேலும் பெரிய மனிதனாக இவ்வுலகை வலம் வந்த ஆண்டவராகிய நீவிரே இன்று முதல் பெரியாண்டவர் என்று அழைக்கப்படுவீர் என உமையவள் கூறினாள். இவ்வார்தையை கேட்ட தேவர் முதலானோர் பெரியாண்டவா பெரியாண்டவா எனக் கூறி அழைத்து அவர் பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சுற்றி நின்ற சிவகணங்களும் எம்பெருமான் நாமம் கூறி வணங்கி நின்றன.

ஒருநிலையில் திருநிலையாய் நிறுத்திய இவ்விடம் திருநிலை என அழைக்கப்படும் எனக் கூறிய ஜயன், மேலூம் உலகை காக்கும் நாயகி உமையவள் என்னை திருநிலையாய் நிலை கொண்டு ஆட்கொண்டதால் இன்று முதல் திருநிலைநாயகி எனஅழைக்கப்படுவாள் என்று வாழ்த்தினார். இவ்வார்த்தையைக் கேட்ட தேவர் முதலானோர் திருநிலை நாயகி என அழைத்து மகிழ்ந்து அவர் பொற்பாதத்தில் மலர் தூவி வாழ்த்தினர். சிவபெருமான் திருநிலையாய் ஒருநிலையில் தன்பாதம் பதித்து அருள்புரிந்த திருத்தலமே திருநிலையாகும்.

மேலும் பார்வதிதேவி தாயின் கருவின்றி பெரியமனிதனாக தோன்றி நிவீரே உலகை வலம் வந்தமையால் இவ்வுலகில் கருவின்றி வாடும் தம்பதியர்க்கு யார் இவ்விடத்தில் உன்நாமம் நினைக்கின்றார்களோ அவர்களுக்கு மழலைகளை வழங்கி அருள் புரியவேண்டும் என வேண்டினார். இறைவனும் அவ்வாறே நடைபெறும் என அருளினார்.இன்றும் இவ்வாலயத்தின் அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் நீறாடி இறைவனை நினைத்து மனம் உருகி நெய் திபம் ஏற்றினால் எந்த ஒரு தம்பதியும் குழந்தைபேறு பெருவார்கள் என்பது இறையன்பர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக விளங்குகிறது.

மேலும் ஆண்டவனின் பாதம் பதித்த இடத்தில் ஜோதி வெளிப்பட்டு சுயம்பு லிங்கம் அமைந்துள்ளது. சூலாயுதம் வீழ்ந்த இடத்தில் இருந்து 21 ஓர் மண் உருண்டைகள் சிதறி சுற்றி விழ்ந்து, பின் அவை ஒவ்வொன்றும் மண்ணில் இருந்து சிவகணங்களாக உருமாறி நின்றதை நினைவு கொள்ளும் விதமாக இவ்வாலயத்தில் 21 ஓர் மண் உருண்டைகள் சிவகணங்களாக செய்து வைத்து சுயம்பு லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் அவைகளுக்கும் செய்து ஆராதனை காட்டி அருள் பெருவது எங்கும் காணாத அதிசயம் ஆகும். நந்தி பகவானூம் மனிதவடிவில் தோன்றி சிவனைபோல் அருள்வது இங்கு காணலாம்.

நெடுங்காலத்திற்கு முன்பு ஒரு தம்பதியினர் குழந்தைபேறு இல்லாமல் மனவேதனையுடன் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிவபெருமானை மனதில் நினைத்து மனமுருக வேண்டி துதித்து வந்தனர். ஒருநாள் சிவபெருமான் அவர்கள் கனவில் தோன்றி நான் பெரியாண்டவர் அவதாரக் கோலதில் உலகை வலம் வந்தபோது என்னை நிலைகொள்ள செய்த இடமான திருநிலைக்கு சென்று வேண்டினால் உங்களுக்கு மழலை செல்வம் கிட்டும் என்றும் மேலும் உங்களுக்கு வழிகாட்டியாக ஒரு பன்றி அழைத்து செல்லும் என்று கூறி மறைந்தார். அவர்களும் அங்கு எப்படி செல்வது என்று தெரியாமல் விழித்தபொது திடீர் என்று அங்கு ஒரு பன்றி தோன்றி அவர்களுக்கு வழி காட்ட அவர்களும் இறைவன் கூறியவாறே அதன் பின்னே சென்றனர். அது ஒரு இடத்தில் ஆடாமல் அசையாமல் திருநிலையாய் நின்று பின் திடிர் என காணமல் மறைந்து. இறைவனே தங்களுக்கு பன்றி உருவில் வந்து வழிகாட்டியதாக நினைத்து வழிபட்டபோது அந்த இடம் வெட்டவெளியில் ஒளிமயமாய் திகழ்ந்து ஜோதி தரிசனம் தந்தது. அதைக் கண்ட அவர்கள் பெரியாண்டவர் நாமத்தை மனமுருக சொல்லி வழிபட்டனர். ஒர் ஆண்டுகழித்து ஆண்குழந்தை பெற்றதாக கோயில் தல வரலாறு கூறுகின்றது.

திருநிலையில் ஒருநிலையாய் நின்று அற்புதங்கள் நிகழ்த்தி அன்பர்களை காத்திடும் இறைவனாக, நெஞ்சாரத் தம்மை பணிந்து வணங்குவோர்க்கு வேண்டும் வரம் வழங்கி, இந்த புவணத்தை காத்து ரட்சிக்கும் எம்பெருமானாக பெரியாண்டவர் விளங்குகிறார். இம்மை மறுமை எனும் பிறவிப் பெருந்துன்பம் போக்கி அடியாரை ஆட்கொள்ளும் நாயகனாக எம்பெருமான் காட்சிதருகின்றார். அவரின் அற்புதங்கள் கணக்கில் அடங்கா. மழலை இல்லா மங்கையரின் மனக்குறை களைந்து மழலைகளை உடன்வழங்கி, மனநலம் கண்டோர் வாழ்வில் நலவலம் வழங்கி, மணமாகதப் பெண்களுக்கு எளிதில் மணங்கூட்டி, ஏழை எளியோரின் வாழ்வை காத்து ரட்ச்சித்து, உழைத்து ஊர்காக்கும் உழவர்க்ளின் பயிர் வாழ மழைவளம் அளித்து, கொஞ்சித்தவழும் குழந்தைகளை அஞ்சாது காத்து, நாடிவரும் அடியார்கள் வாழ்வில் அஞ்ஞானம் நீக்கி மெய்ஞானம் வழங்கி மேன்மையான வாழ்வு தரும் இத்திருத்தலத்திற்கு வருகை தந்து பெரியாண்டவரின் பொற்பாதம் வணங்கி அவரின் திருவருளைப் பெற்று வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டுகின்றோம்.

வெண்பனி மேகங்கள் விளையாட்டாய் மோதி விளையாடும் மலைகளும், குன்றுகளும் சூழ அடர்ந்த வனங்கள் நிறைந்தும், பூத்துக் குலுங்கும் சோலைகளும், துள்ளி விளையாடும் புள்ளி மான்களும், புள்ளினங்களின் இசையும், நீர் நிறைந்த வயல்வெளியும், விளைந்த நெல்மணிகள் காற்றில் ஒலிக்கும் சங்கீத ஒசையும் இயற்கை அன்னை இயல்பாக அமர்ந்து வசீகரிக்கும் மாட்சிமை பொருந்திய எழில் நிறைந்த திருநிலை கிராமத்தில் வெட்டவெளியில் குடிகொண்டிருக்கும் இறைவன் ஆலயம் வடபுறம் குளக்கரையும், தென்புறம் ஏரிக்கரையும் கொண்டு கிழக்குமுகம் வாசல் கொண்டு அமைந்துள்ளது. நுழைவு வாயிலின் இடதுபுறம் பாலவிநாயகரும், வலதுபுறம் பாலமுருகப் பெருமானும் அருட்காட்சி தருகின்றனர்.

மூன்று நிலை கோபுரம்

மூவேழு உலகை வலம் வந்த வண்ணம், மூ இலை வேல் கையனாம், முக்கண்ணனாம், மூவருள் முதல்வனாம் மும்மலம் அழிப்பவனாம், இவ்வாறாக மூன்று நிலை கொண்டு உயர்ந்து நிற்கும் சிவபெருமான் குடியிருக்கும் இவ்வாலயம் மூன்று நிலை கோபுரத்துடன் அமைந்துள்ளது.

விநாயகர், முருகர்

நுழைவு வாயிலின் இடதுபுறம் தலவிநாயகர் காட்சி தருகிறார். அவரைக் காணுகையில் நம் தடைகள் தகர்ந்து போகின்றன.

நுழைவு வாயிலின் வலதுபுறம் ஆறுமுகமாம், பன்னிரெண்டு கைகளாம், மயில் மீதமர்ந்த வேலவனாம், வேண்டுதல் செய்தால் கைமேல் பலன்தரும் பாலகனாம் முருகப் பெருமான் அமர்ந்து அருளாசி வழங்கி அன்பர்களுக்கு மூவேழு வலம் வந்த நாயகனைக் காண வழிவிடுகின்றார்.

16 கால் மண்டபம்

16 கால் மண்டப நுழைவு வாயிலில் உள்ளே நுழைந்தால் நேரே வீபூதி விநாயகரை தரிசனம் செய்யலாம். இவரை விபூதி கொண்டு நாமே அபிஷேகம் செய்தால் செல்வம், கல்வி, அறிவு பெறலாம். இது வேறு எங்கும் காணாத இவ்வாலயத்தின் சிறப்பம்சம். மண்டபத்தின் உள்ளே ஈசன் மனிதனாக உலகை வலம்வந்து ஒரு நிலையில் திருநிலையாய் நின்ற அற்புத கோலமும், அவரை ஒரு நிலையில் ஆட்கொண்ட அங்காளபரமேஸ்வரி ஈசனை வணங்கி நிற்கும் காட்சியும், இவர்கள் இருவரையும் திருமூலரும், இராமலிங்க அடிகளாரும் வணங்கி நிற்பதையும் காணலாம்.

இரண்டாம் நிலை

தங்கமுலாம் பூசிய தகட்டால் வேயப்பட்ட இரண்டாம் நிலை வாயிலின் இடதுபுறம் சித்திபுத்தி விநாயகரும், வலதுபுறம் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமானும் காட்சி தருகின்றனர். நுழைவு வாயில் மேற்புறம் ரிஷப வாகனத்தில் சக்தியுடன் அமர்ந்து எம்பெருமான் அருளும் அற்புதக் காட்சியைக் காணலாம்.

பெரியாண்டவர் தோற்றத்துடன் காட்சி

சுயம்பு லிங்கத்தின் மேற்புறம் மனித உருவில் உலகை வலம் வந்த, மானிடம் காக்க வந்த முதற் கடவுளாக, அருள் தருவதில் முன்னிற்கும் மூர்த்தியாக, பக்தர்களைக் காத்திட ஒருநிலையாய் திருநிலையில் நின்று பெரியாண்டவராக அமர்ந்து காட்சி தருகின்றார்.

அங்காள பரமேஸ்வரி

சுயம்புவின் வலதுபுறம் உலகை வலம் வந்த சிவபெருமானை ஒருநிலையில் சூலாயுதத்தால் நிறுத்திய, அகங்காரம் நீக்கி அன்புதனை புகுத்திடும் அன்னையாக, அடியவர்களின் துயரை விரைவில் நீக்கிடும் வடிவாம்பிகையாக ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அன்பு பொங்க அருட்காட்சி தருகின்றார். அங்காள பரமேஸ்வரிக்கு நேர் எதிர்திசையில் சிவனும் சக்தியும் ஒன்று சேர்ந்து அர்த்தநாரீஸ்வரர் உருவில் அமர்ந்து காடசி தருகின்றனர்.

மற்ற மூர்த்திகள்

ஆலயத்தில் தட்சினாமூர்த்தி கோபுரத்தின் தெற்கு திசையில் அமைந்துள்ளார். பைரவர் கோபுரத்தின் வட திசையில் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சி தருகின்றார். சிவனும் சக்தியும் கால் பதித்து ஓருசேர நின்ற இவ்விடத்தில் சிவபாதமும், சக்தி பாதமும் தனித்தனியாக காட்சி தருவது தரிசிப்பவர் பாவத்தை போக்கவல்ல கண்கொள்ளா காட்சியாகும்.

சிவகணங்கள்

சுயம்பு லிங்கத்தைச் சுற்றி செவ்வக வடிவில் 21 சிவகணங்கள் இறைவனை வணங்கி நின்று காட்சி தரும் கோலம் வேறு எங்கும் காண முடியாத காட்சியாகும். மேலும் சிவன் மனித ரூபத்தில் உலகை பெரியாண்டவராக அவதாரம் எடுத்து வலம் வந்தபோது, நந்தி பகவானும் அவ்வாறே கோலம் கொண்டு வலம் வந்து இறைவனின் முன்னால் மனித ரூபத்தில் எழுந்து அருள்பாலிக்கும் அரிய காட்சியை இங்கு காண முடியும்.

நாகாத்தம்மன் சன்னதி

ஆலயத்தின் வடபுறம் அமைந்துள்ள சித்தாமிர்த குளத்திற்கு செல்லும் வழியில் முன்னால் தனி சன்னதி கொண்டு விநாயகர், முருகர் இருபுறமும் இருக்க நாகாத்தம்மன் கிழக்கு நோக்கு அமர்ந்த கோலத்தில் அருட்காட்சி தருகிறாள்.

  • ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மாலை 5 மணி முதல் சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
  • மகா சிவராத்திரியை முன்னிட்டு மாலை 4 மணிமுதல் தேவார இசையுடன் தொடங்கி இரவு 6 மணி அளவில் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி ஆலய வீதிவுலா வந்து அருளுதல் மற்றும் நான்கு கால சிறப்பு பூசை இரவு முழுவதும் நடைபெறும். மேலும் சிவபுராணம் நாடகம் நடைபெறும். இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
  • கார்த்திகை மாத தீபம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறும்.
  • ஜப்பசி மாத பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெறும். அன்று இரவு சிறப்பு அன்னதானம் நடைபெறும்.
  • ஜனவரி முதல் தேதி மற்றும், தமிழ் புத்தாண்டு சித்திரை முதல் நாள் சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும் அர்ச்சனை, ஆராதனை ஆகியவையும் நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
  • செப்டம்பர் 12 அன்று ஒவ்வொரு வருடமும் மாலை 4 மணிமுதல் தேவார இசையுடன் தொடங்கி இரவு 6 மணி அளவில் பெரியாண்டவர் அங்காளபரமேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் தோன்றி இறை அன்பர்களுடன் அருகில் உள்ள விநாயகர் ஆலயத்தில் இருந்து பால் குடம் எடுத்தல் தொடங்கி சுயம்பு லிங்கமான பெரியண்டவருக்கு வருகின்ற அத்தனை இறை அன்பர்களும் தம் கைகளால் பால் அபிஷகம் செய்யும் விழா நடைபெறும். அன்று இரவு சிறப்பு நிகழ்ச்சிகள், சிறப்பு வழிபாடுகளும்,அர்ச்சனை, ஆராதனை நடைபெற்று வருகின்றன. பக்தர்களுக்கு சிறப்பு அன்னதானமும் வழங்கப்படுகின்றது.
  • பெரியான்டவரை குலதெய்வமாக கொண்ட ஆயிரமாயிரம் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பெரியாண்டவருக்கு உகந்த நாட்களான ஞாயிறு, திங்கள், செவ்வாய் போன்ற நாட்களில் பொங்கல் வைத்து படைப்பது, 21 இருபத்தி ஓர் மண் உருண்டையில் பிள்ளையார் செய்வித்து சிறப்பு அபிஷேகம் செய்வித்தல் நடைபெறுகின்றன.
  • அப்பொழுது மொட்டை அடித்தல் காது குத்துதல் போன்ற விழாக்கள் வார முழுவதும் நடைபெறுகின்றன.
  • குழந்தை வரம் வேண்டி பலன் பெற்ற பல குடும்பங்கள் துலாபாரம் வழங்கும் நிகச்சி நடைபெறுகின்றது.
திருக்கோவிலில் நடைபெறும் பூஜைகள் ...

சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம்.

சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உரு கொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து, சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து, ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து, கற்பூர ஆராதனை காட்டி தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

ஒவ்வொரு பெளர்ணமி தினத்தில் மாலைப் பொழுதில் சிறப்பு அபிஷேகமும், அர்ச்சனை, ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. பூஜை முடிந்தவுடன் அன்னதானமும் இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை தோறும் மாலை வேளையில் சிறப்பு அபிஷேகமும், பூஜைகளும் நடைபெற்று வருகின்றன.

அன்னாபிஷேகம், கார்த்திகை தீபம், மஹாசிவராத்திரி விழக்களும் இங்கு மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன.

சக்தியின் சூலாயுதம் திருநிலையில் வீழ்ந்த போது 21 மண் உருண்டைகள் சிதறி வீழ்ந்து அவை சிவகணங்களாக மாறிய தலம். திருநிலையில் சிவகணங்கள் மண்ணில் இருந்து தோன்றி ஈசனை மண் உருகொண்டு வணங்கி அருள் பெற்றது போல் நாமும் சிவகணங்கள் மற்றும் ஈசனின் அருள் பெற 21 மண் உருண்டைகள் பிடித்து சிலையின் முன்புறம் செவ்வக வடிவில் அடுக்கி வைத்து ஒவ்வொன்றுக்கும் அபிஷேகம் செய்து கற்பூர ஆராதனை காட்டி அருள் பெருவதால் எல்லா வளமும் பெற்று நல்வாழ்வு பெறலாம்.

பெரியாண்டவர் சிவகண பூசை செய்ய விரும்பும் குடும்ப அங்கத்தினர் முதலில் பெரியாண்டவர் ஆலயத்திற்கு வருகை தந்து ஆண்டவனை முதலில் வணங்கி இறையன்பர்களின் குடும்பத்தினருடன் பெரியாண்டவர் ஆலயத்திற்கு அருகில் உள்ள சித்தாமிர்த குளத்தில் தங்கள் உறவினர்களுடன் சென்று தங்களை நீரினால் சுத்தம் செய்துகொண்டு சித்தாமிர்த குள படித்துறையில் அமர்ந்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து அருகம்புல் கொண்டு புஷ்பம் வைத்து உலகின் முதல் கடவுளாம் விநாயகப் பெருமானை நினைத்து தேங்காய் உடைத்து கற்பூர ஆராதனை காட்டவேண்டும். பெரியாண்டவர் மற்றும் அங்காளபரமேஸ்வரி கலசம் உருவாக்க வேண்டும். அதற்கு இரண்டு கலசங்கள் வைத்து கங்கை நீர் அதில் ஊற்றி ஏலக்காய், லவங்கம், பச்சை கற்பூரம், எலும்பிச்சைபழம் மற்றும் ஒருரூபாய் நாணயம் குடத்தில் விட்டு மாவிலை வைத்து அதன்மேல் மட்டை தேங்காய் வைக்கவேண்டும்.

முதல் மட்டை தேங்காய் வைக்கப்பட்ட கலசத்தில் மஞ்சள் குங்குமம் இட்டு வெள்ளை துண்டு அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டாவது கலசம் வேப்பிலையால் கரகம் செய்து உச்சியில் எலும்பிச்சைபழம் செருகி மஞ்சள் குங்குமம் இட்டு கதம்ப மலரால் கரகத்தை அலங்கரித்து சிகப்பு கலர் ஆடை கொண்டு அணிவித்து மலர்மாலை சூடி அங்காளபரமேஸ்வரியாக ஆவாகனம் செய்யவேண்டும். இரண்டு கலசங்களுக்கும் ஊதுபத்தி ஏற்றி தேங்காய் உடைத்து கற்பூர ஆரதனை காட்டி பெரியாண்டவருக்கு அரோகரா பெரியாண்டவருக்கு அரோகரா என பலமுறை கூறி தம் உறவினருடன் மனம் உருகி வேண்டி வணங்குதல் வேண்டும். பெரியாண்டவர் சிவகண பூசைசெய்யும் தம்பதியினர் ஆளுக்கொரு கலசமாக தம் கைகளில் ஏந்தி பெரியாண்டவருக்கு அரோகரா கோஷத்தை எழுப்பியவாறு சித்தாமிர்த குளக்கரையில் இருந்து ஆலயத்திற்கு வரவேண்டும். வந்தபின் சுயம்புலிங்கத்தின் வலதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் பெரியாண்டவர் கலசமும் இடதுபுறம் வாழையிலையில் பச்சைஅரிசி பரப்பி அதன்மேல் அங்காளபரமேஸ்வரி கலசமும் வைக்கப்படவேண்டும்.

கலசங்கள் வருவதற்கு முன்பாக ஆலயத்தின் உள் மற்றும் வெளிப் பிரகாரத்தில் மஞ்சள் நீரால் தெளித்து துர்க்கா தேவியை மனதில் நினைத்து கற்பூர ஆராதனை செய்து துஷ்டதேவதைகள் உள்ளே வராமல் துணை நிற்குமாறு வேண்டிக் கொள்ள வேண்டும். பின் வெண் பூசணியை நான்காக வெட்டி மஞ்சள் குங்குமம் தடவி ஆலயத்தின் வெளி பிரகாரம் நான்கு மூலைகளிலும் வைத்து தீபாரதனை செய்ய வேண்டும். பின் தம் உறவினருடன் சேர்ந்து இருபத்தி ஓர் சிவகணங்கள் [மண்பிள்ளையார்] தம் கைகளால் செய்வித்து அவற்றினை ஆலயத்தின் உள்ளே கொண்டுவந்து சுயம்புலிங்கத்தை சுற்றி செவ்வக வடிவில் இரண்டு இரண்டாக வைக்கப்படவேண்டும். எதிரடியாக ஓர் சிவகணமுமாக மொத்தம் இருபத்திஓர் சிவகணம் வைக்கப்படவேண்டும்.

மூன்று குத்துவிளக்குகளை எடுத்துக் கொண்டு அலங்காரம் செய்து ஒருமுகமாக திரி போட வேண்டும். முதல் குத்துவிளக்கில் மஞ்சள் துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ துர்க்காதேவியாக ஆவாகனம் செய்வித்து எதிரடியாக உள்ள ஒரு சிவகணம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். இரண்டாவது குத்துவிளக்கில் சிவப்பு துண்டு அணிவித்து மாலை அணிவித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி ஆவாகனம் செய்வித்து ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும். மூன்றாவது குத்துவிளக்கில் வெள்ளை துண்டு அணிவித்து மாலை அணிவித்து பெரியாண்டவராக ஆவாகனம் செய்வித்து பெரியாண்டவர் கலசம் உள்ள பகுதியில் வைக்கப்படவேண்டும்.

இருபத்திஓர் சிவகணங்களுக்கு அருகில் மண் அகல் விளக்கு கொண்டு திரி ஏற்றி வைக்கப்படவேண்டும். காரணம் இறைவன் ஜோதிவடிவம் காட்டி சுயம்புவாய் அமர்ந்து அருள்வடிவம் கொண்டு அன்பர்களை காப்பதினால்.

பூசை பொருற்களான எண்ணெய், சியக்காய்த்தூள், பால், தயிர், கதம்பத்தூள், தேன், எலும்பிச்சைபழம், இளநீர், பன்னீர், சந்தனம் போன்ற பொருட்களை கொண்டு தங்கள் உறவினர்கள் சுற்றம் சூழ சிவகணங்களுக்கு [மண்பிள்ளையார்] அபிஷேகம் செய்யப்படவேண்டும். அபிஷேகம் நிறைவு பெற்றவுடன் விபூதி மற்றும் குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கப்படவேண்டும்.

சுயம்புலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறவேண்டும். பின் அலங்காரம் முடிந்தவுடன் வாழையிலை கொண்டு படையல் போடவேண்டும். அதேபோல் இருபத்திஓர் சிவகணங்களுக்கும் இருபத்தி ஓர் வாழையிலை வைத்து அவற்றின் மேல் பொங்கல், வடை, பால் பாயசம், சுண்டல், வாழைப்பழம், வெற்றிலைபாக்கு மற்றும் இருபத்தி ஓர் தேங்காய் உடைத்து வைத்து ஊதுபத்தி ஏற்றி வைக்கப்படவேண்டும். பின் ஒவ்வோரு சிவகணங்களுக்கு முன்பும் 10 கிராம் எடையுள்ள கற்பூர கட்டி வைக்கப்படவேண்டும் விநாயகருக்கு கற்பூர ஆராதனை காட்டி பின் சுயம்புலிங்கத்திற்கு ஆராதனை காட்டி சிவசக்தி பாதத்திற்கு ஆராதனை காட்டி, பெரியாண்டவர் கலசம் மற்றும் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி கலசம் ஆராதனை காட்டி பின் தம் உறவினருடன் பெரியாண்டவருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் இருபத்தி ஓர் சிவகணங்களுக்கு முன்னாள் உள்ள கற்பூரத்தை ஏற்றப்படவேண்டும். பின்பு அனைவரும் திங்களில் ஜோதிநீ, தினகரன் ஜோதிநீ ,அங்கியில் ஜோதிநீ, அணைத்திலும் ஜோதிநீ, எங்களுள் ஜோதிநீ ,ஈஸ்வர ஜோதிநீ ,கங்கிலா ஜோதிநீ, கற்பூர ஜோதி நீயே என ஆண்டவனை நினைத்து மனம் உருகி பாடி வணங்கவேண்டும்.

இவ்வாறு பூஜை செய்வோருக்கு பெரியாண்டவர் சகல செளபாக்கியங்களும் வழங்குவார் என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

மஞ்சள் 100 கிராம்
குங்குமம் 100 கிராம்
சந்தனம் 2 டப்பா 
கற்பூரம் 250 கிராம்
சாம்பிராணி 100 கிராம்
கதம்பத்தூள் 100 கிராம்
நல்லென்ணெய் 1 கிலோ
நெய் 100 கிராம்
அவல் பொறிகடலை 150 கிராம்
விபூதி [500 கிராம் ]
சியக்காய் தூள்[2 பாக்கட்]
தேன் 50 கிராம்(2பாட்டில்)
பன்னீர் (2பாட்டில்) 
ஊதுபத்தி பாக்கட் இரண்டு 
வெட்டிவேர் 5 ரூபாய்
திரிநூல் ஒன்று  
தீப்பெட்டி ஒன்று
கலசநூல் உருண்டை இரண்டு
பிள்ளையார் துண்டு 
தேங்காய் 20
இளநீர் 2
கல்யாண பூசணிக்காய் 1
எலும்பிச்சை பழம் 6
பூமாலை 6
கதம்ப பூ 20 முழம்
வாழைப்பழம் 50
வாழை இலை [நுனி] 15
பச்சரிசி 1 கிலோ
வெல்லம் 1 கிலோ
பஞ்சாமிர்தம் 5 பழவகைகள்
வெற்றிலை பாக்கு 20 ரூபாய்
தயிர் 1/2 லிட்டர்
பால் 1 லிட்டர்

கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும்.

மஞ்சள் 50 கிராம்
குங்குமம் 50 கிராம்
சந்தனம் 1 டப்பா 
கற்பூரம் 25 கிராம்
கதம்பத்தூள் 50 கிராம்
நல் லென்ணெய் 200 கிராம் 
நெய் 100 கிராம்
அவல் பொறிகடலை 150 கிராம்
விபூதி [500 கிராம் ]
சியக்காய் தூள்[1 பாக்கட்]
தேன் 50 கிராம்(1பாட்டில்)
பன்னீர் (1 பாட்டில்) 
ஊதுபத்தி பாக்கட் ஒன்று  
வெட்டிவேர் 5 ரூபாய்
திரிநூல் ஒன்று  
தீப்பெட்டி ஒன்று
கலசநூல் உருண்டை இரண்டு
பிள்ளையார் துண்டு ஒன்று 
தேங்காய் 2
இளநீர் 2
எலும்பிச்சை பழம் 3
பூமாலை 2
கதம்ப பூ 5 முழம்
வாழைப்பழம் 10
வாழை இலை [நுனி] 1
பச்சரிசி 1 கிலோ
வெல்லம் 1 கிலோ
பஞ்சாமிர்தம் 5 பழவகைகள்
வெற்றிலை பாக்கு 5 ரூபாய்
தயிர் 1/2 லிட்டர்
பால் 1 லிட்டர்

கொண்டை கடலை, அன்னதான பிரசாதம், வடை, பாயாசம் வீட்டிலிருந்து தயார் செய்துகொண்டு வரவும்.

ஆக்கம்: திரு. கண்ணப்பன், ஆசிரியர், மானாம்பதி

திருநீற்றை மருந்தாக்கி
உறுநோயை போக்கிட்ட
குருவான பெரியாண்டவா
கருக்கொள்ள வரம் வேண்டி
வருகின்ற மாந்தர்க்கு
தருகின்றாய் மகவல்லவா

விதிதன்னின் வலியாலே
விழிசோர்ந்து அழுவோர்க்கு
வழிகாட்டி நீயல்லவா
மதிதந்து நிதிதந்து
மனதார அருள்தந்து
மகிழ்வாக எனைப்பாரய்யா

நீர்சூழ்ந்த உலகோரை
நிதம் காக்கும் என்ஈசா
நினையன்றி துணையாரய்யா
ஏர்கொண்டு வாழ்கின்ற
எளியோரின் துயர்போக்க
பொழிகின்ற மழையல்லவா

மனம்நொந்து விழிமூடி
உனைவேண்டி தொழுவார்க்
குமலர்தந்து குறிசொல்லுவாய்
தினந்தோறும் உனையெண்ணி
திருசேர வரம் வேண்டும்
எனையேனோ மறந்தீரய்யா

மணம்வேண்டி தொழுகின்ற
மங்கையரின் உளமேற்க
மாங்கல்யம் தரவேண்டுமே
மகவொன்று தரவேண்டி
மனமேங்கி நிற்போர்க்கு
பகவானுன் அருள் வேண்டுமே

வருந்துன்பம் தடுத்திட்டே
வளமான நிலைசேர்க்கும்
திருநிலையின் பெரியாண்டவா
பெருந்துயரம் எனைத்தீண்டா
பேறெனக்கு தரவேண்டும்
பெரியோனே பெரியாண்டவா

கருவின்றி உருவான
திருவே உன் அருள்கேட்டேன்
வரவேண்டும் தரவேண்டுமே
வருவோரின் துயர்கண்டு
வளம்தந்து நலம்தந்து
பெருவாழ்வு நீ தாருமே

உமையாளின் கோபத்தால்
உருமாறி திரிந்தோடி
திருநிலையில் அமர்ந்தீரய்யா
எமையாளும் ஈஸ்வரனே
எந்நாளும் உனைமறவா
நிலையெனக்கு தருவீரய்யா

வேலாயுதம் கொண்ட
வித்தகனைப் பெற்றவளின் 
சூலாயுதம் ஏற்றவா
சூலாயுதம் தன்னின்
சூட்சுமத்தை நன்றிவேன்
சுகம் தந்து எனைமாற்றவா

பிடிமண்ணாய் உனைவைத்து
பெருவாழ்வு தனைவேண்டும்
பேராசை கொள்வோமய்யா
அடிபோற்றி நின்றோரின்
அகமேற்று நல்வாழ்வை
அளிப்பதுவும் நீர்தானைய்யா

உமையாளை உடன்சேர்த்து
உலகாளும் பெரியோனே
உனைகாண வந்தோமன்றோ
சுமையான இன்னல்களை
சுடர்முன்னே இறக்கிவிட்டோம்
சுகம்யாவும் பெறுவோமன்றோ

ஆக்கம்: திரு அருள்மணி, திருக்கழுக்குன்றம்

திருவிளங்க அருள்வோனே
திருநிலையில் அமர்ந்தோனே
ஒருநிலையில் தான் இருந்து
ஓங்குபுகழ் தருவோனே
பிரியமுடன் உனைப் பணிந்தால்
அரியவரம் தந்தருள்வாய்
பெரியாண்டவா என நினைத்தால்
நிமிடத்தில் வந்தருள்வாய்

நலம்காக்கும் நாயகனே
வளம் சேர்க்கும் தூயவனே
குலம் காக்கும் காவலனே
பலம் சேர்க்கும் மறையோனே
உளமாற பணிந்திட்டால்
உயர்வளிக்கும் பெருமானே
வரும்துன்பம் தனைநீக்கி
பெரும்புகழைத் தருவோனே
உன் பொற்பாதம் பணிகின்றோம்
பெரியாண்டவ பெருமானே