திருநீற்றை மருந்தாக்கி உறுநோயை போக்கிட்ட குருவான பெரியாண்டவா கருக்கொள்ள வரம் வேண்டி வருகின்ற மாந்தர்க்கு தருகின்றாய் மகவல்லவா விதிதன்னின் வலியாலே விழிசோர்ந்து அழுவோர்க்கு வழிகாட்டி நீயல்லவா மதிதந்து நிதிதந்து மனதார அருள்தந்து மகிழ்வாக எனைப்பாரய்யா நீர்சூழ்ந்த உலகோரை நிதம் காக்கும் என்ஈசா நினையன்றி துணையாரய்யா ஏர்கொண்டு வாழ்கின்ற எளியோரின் துயர்போக்க பொழிகின்ற மழையல்லவா மனம்நொந்து விழிமூடி உனைவேண்டி தொழுவார்க்கு மலர்தந்து குறிசொல்லுவாய் தினந்தோறும் உனையெண்ணி திருசேர வரம் வேண்டும் எனையேனோ மறந்தீரய்யா மணம்வேண்டி தொழுகின்ற மங்கையரின் உளமேற்க மாங்கல்யம் தரவேண்டுமே மகவொன்று தரவேண்டி மனமேங்கி நிற்போர்க்கு பகவானுன் அருள் வேண்டுமே வருந்துன்பம் தடுத்திட்டே வளமான நிலைசேர்க்கும் திருநிலையின் பெரியாண்டவா பெருந்துயரம் எனைத்தீண்டா பேறெனக்கு தரவேண்டும் பெரியோனே பெரியாண்டவா கருவின்றி உருவான திருவே உன் அருள்கேட்டேன் வரவேண்டும் தரவேண்டுமே வருவோரின் துயர்கண்டு வளம்தந்து நலம்தந்து பெருவாழ்வு நீ தாருமே |
உமையாளின் கோபத்தால் உருமாறி திரிந்தோடி திருநிலையில் அமர்ந்தீரய்யா எமையாளும் ஈஸ்வரனே எந்நாளும் உனைமறவா நிலையெனக்கு தருவீரய்யா வேலாயுதம் கொண்ட வித்தகனைப் பெற்றவளின் சூலாயுதம் ஏற்றவா சூலாயுதம் தன்னின் சூட்சுமத்தை நன்றிவேன் சுகம்தந்து எனைமாற்றவா பிடிமண்ணாய் உனைவைத்து பெருவாழ்வு தனைவேண்டும் பேராசை கொள்வோமய்யா அடிபோற்றி நின்றோரின் அகமேற்று நல்வாழ்வை அளிப்பதுவும் நீர்தானைய்யா உமையாளை உடன்சேர்த்து உலகாளும் பெரியோனே உனைகாண வந்தோமன்றோ சுமையான இன்னல்களை சுடர்முன்னே இறக்கிவிட்டோம் சுகம்யாவும் பெறுவோமன்றோ ஆக்கம்: திரு. கண்ணப்பன் ஆசிரியர், மானாம்பதி திருவிளங்க அருள்வோனே திருநிலையில் அமர்ந்தோனே ஒருநிலையில் தான் இருந்து ஓங்குபுகழ் தருவோனே பிரியமுடன் உனைப் பணிந்தால் அரியவரம் தந்தருள்வாய் பெரியாண்டவா என நினைத்தால் நிமிடத்தில் வந்தருள்வாய் நலம்காக்கும் நாயகனே வளம் சேர்க்கும் தூயவனே குலம் காக்கும் காவலனே பலம் சேர்க்கும் மறையோனே உளமாற பணிந்திட்டால் உயர்வளிக்கும் பெருமானே வரும்துன்பம் தனைநீக்கி பெரும்புகழைத் தருவோனே உன் பொற்பாதம் பணிகின்றோம் பெரியாண்டவ பெருமானே ஆக்கம்: திரு அருள்மணி, திருக்கழுக்குன்றம். |