திருநிலை பெரியாண்டவர் ஆலயம்
சிவன், சக்தி ஆகிய இருவரின் அருளும் ஒருங்கே அமையப் பெற்ற திருத்தலம்

Aarthi Logo aarthi logo

ஸ்ரீ பெரியாண்டவர் துதிப்பாமாலை


திருநீற்றை மருந்தாக்கி

உறுநோயை போக்கிட்ட

குருவான பெரியாண்டவா

கருக்கொள்ள வரம் வேண்டி

வருகின்ற மாந்தர்க்கு

தருகின்றாய் மகவல்லவா



விதிதன்னின் வலியாலே

விழிசோர்ந்து அழுவோர்க்கு

வழிகாட்டி நீயல்லவா

மதிதந்து நிதிதந்து

மனதார அருள்தந்து

மகிழ்வாக எனைப்பாரய்யா



நீர்சூழ்ந்த உலகோரை

நிதம் காக்கும் என்ஈசா

நினையன்றி துணையாரய்யா

ஏர்கொண்டு வாழ்கின்ற

எளியோரின் துயர்போக்க

பொழிகின்ற மழையல்லவா



மனம்நொந்து விழிமூடி

உனைவேண்டி தொழுவார்க்கு

மலர்தந்து குறிசொல்லுவாய்

தினந்தோறும் உனையெண்ணி

திருசேர வரம் வேண்டும்

எனையேனோ மறந்தீரய்யா



மணம்வேண்டி தொழுகின்ற

மங்கையரின் உளமேற்க

மாங்கல்யம் தரவேண்டுமே

மகவொன்று தரவேண்டி

மனமேங்கி நிற்போர்க்கு

பகவானுன் அருள் வேண்டுமே



வருந்துன்பம் தடுத்திட்டே

வளமான நிலைசேர்க்கும்

திருநிலையின் பெரியாண்டவா

பெருந்துயரம் எனைத்தீண்டா

பேறெனக்கு தரவேண்டும்

பெரியோனே பெரியாண்டவா



கருவின்றி உருவான

திருவே உன் அருள்கேட்டேன்

வரவேண்டும் தரவேண்டுமே

வருவோரின் துயர்கண்டு

வளம்தந்து நலம்தந்து

பெருவாழ்வு நீ தாருமே


உமையாளின் கோபத்தால்

உருமாறி திரிந்தோடி

திருநிலையில் அமர்ந்தீரய்யா

எமையாளும் ஈஸ்வரனே

எந்நாளும் உனைமறவா

நிலையெனக்கு தருவீரய்யா



வேலாயுதம் கொண்ட

வித்தகனைப் பெற்றவளின்

சூலாயுதம் ஏற்றவா

சூலாயுதம் தன்னின்

சூட்சுமத்தை நன்றிவேன்

சுகம்தந்து எனைமாற்றவா



பிடிமண்ணாய் உனைவைத்து

பெருவாழ்வு தனைவேண்டும்

பேராசை கொள்வோமய்யா

அடிபோற்றி நின்றோரின்

அகமேற்று நல்வாழ்வை

அளிப்பதுவும் நீர்தானைய்யா



உமையாளை உடன்சேர்த்து

உலகாளும் பெரியோனே

உனைகாண வந்தோமன்றோ

சுமையான இன்னல்களை

சுடர்முன்னே இறக்கிவிட்டோம்

சுகம்யாவும் பெறுவோமன்றோ


ஆக்கம்: திரு. கண்ணப்பன் , ஆசிரியர், மானாம்பதி



திருவிளங்க அருள்வோனே

திருநிலையில் அமர்ந்தோனே

ஒருநிலையில் தான் இருந்து

ஓங்குபுகழ் தருவோனே

பிரியமுடன் உனைப் பணிந்தால்

அரியவரம் தந்தருள்வாய்

பெரியாண்டவா என நினைத்தால்

நிமிடத்தில் வந்தருள்வாய்



நலம்காக்கும் நாயகனே

வளம் சேர்க்கும் தூயவனே

குலம் காக்கும் காவலனே

பலம் சேர்க்கும் மறையோனே

உளமாற பணிந்திட்டால்

உயர்வளிக்கும் பெருமானே

வரும்துன்பம் தனைநீக்கி

பெரும்புகழைத் தருவோனே

உன் பொற்பாதம் பணிகின்றோம்

பெரியாண்டவ பெருமானே

ஆக்கம்: திரு அருள்மணி, திருக்கழுக்குன்றம்.

English Version of the website is also available. Kindly view and send your feedback.

Menu
Copyright © 2008 - 2011 www.periyandavar.com - All rights reserved
Last update: November 1, 2011.